Search This Blog

Thursday 5 April 2018

ஆசாரம் என்பது அந்தணரின் ஆணவமா?


முன்னுரை

சில நாள்களுக்கு முன் ஒருவர் “நான் ஒரு பார்ப்பனர் வீட்டுக்குச் சென்றபோது அவர்கள் எனக்குத் தேனீர் விருந்து அளித்தனர். ஆனால் நான் அதனைக் கோப்பையைச் சூப்பியபடி அருந்தாமல் நேரே வாயில் ஊற்றிக்கொள்ள வேண்டும் என்றனர். ஏன் இந்த சாதி வெறி?” என்று வருந்தினார். இந்தச் செய்கையில் ஆணவம் இருப்பதாக அவர் வருந்திக் கூறினார்.

பல வருடங்கள் முன் எங்கள் வீட்டு வேலைகள் செய்யும் ஒரு அம்மையார் “உனது தாயாரின் புடவையை நீயே எடுத்துக்கொள். ஐயர் வீட்டில் மடி என்பீர்கள். நான் தொடமுடியாது” என்று சிரித்தபடியும் தயங்கியபடியும் கூறினார்.

அண்மையில் ஒரு பெண் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தேன். அவரது பாட்டியார் மீது அவருக்கு இருந்த அன்பையும் அந்த மூதாட்டியார் இறைவனடி அடைந்ததையும் விவரித்து, ஒரு வருடம் கழித்து கோயிலுக்குச் சென்று இறந்தவரின் ஆன்மா நலம் பெற வழிபாடு செய்யவேண்டிய நாள் அன்று அவருக்கு மாதவிடாய்க் காலமாக அமையவே, குடும்பத்தார் அவரைக் கோயிலுக்கு வரவேண்டாம் என்று தடுத்ததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் உண்மையை மறைத்தே இருக்கலாம் என்று எண்ணுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கருத்துக்களில் சனாதன தருமம் குறித்த சில உண்மைகள் சரியாகப் பரவவில்லை என்பதை இக்கட்டுரையில் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.



பொருளுரை


ஆசாரம் என்றால் என்ன?

“பார்ப்பனர்கள் மற்ற சாதியினரை 'என் மேல் படாதே!' என்பார்களே - அந்த ஆணவம் பிடித்த போக்கு தான் ஆசாரம்” என்பது இக்காலத்தில் நிலவும் ஒரு தவறான புரிதல்.

ஆசாரம் என்ற வடசொல்லுக்கு “நடந்து காட்டுதல்” என்று பொருள். நமது முன்னோர்கள் முனிவர்கள் காட்டிய வழி நடந்தனர். முனிவர்கள் அவர்கள் செய்த தவங்களின் பயனால் நம்மால் ஐம்புலன்கள் மூலம் உணரமுடியாத நுட்பமான சில உண்மைகளை உணர்ந்து அதன்படி நாம் வாழ வழி வகுத்தனர். அவற்றுள் ஒன்று இந்த ஆசாரம்.

ஆசாரங்கள் உடலுக்கு மட்டும் அல்ல. மனதும் வாக்கும் உடையும் வாழ்க்கை முறையும் கூட ஆசாரம் படி இருக்கவேண்டும் என்பது முன்னோர் வகுத்த வழி!

உண்மை மட்டுமே பேசுதல், தீய வார்த்தைகளைத் தவிர்த்தல், போதைப் பொருள்கள் உண்ணாமை / அருந்தாமை, பல் விளக்கும் முன் பேசாமல் இருத்தல் போன்றவை வாய் / வாக்கினால் காக்கப்படவேண்டிய ஆசாரங்கள்.

காமம், குரோதம் முதலான தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இருத்தல், எல்லோருக்கும் நன்மையை விரும்புதல் போன்றவை மனத்தினால் காக்கப்படவேண்டிய ஆசாரங்கள்.

கதிரவன் உதிக்கும் முன் எழுவது, கதிரவன் மறையும் போது உறங்காமல் இறை வழிபாடு செய்வது போன்றவை உரிய காலங்களில் காக்கப்படவேண்டிய ஆசாரங்கள்.

தைத்த ஆடைகளைத் தவிர்த்து நெய்த ஆடைகளை உடுத்துதல், இல்லறத்தில் இருப்போர் கச்சம் வைத்து ஆடை உடுத்துதல் போன்றவை உடைகள் மூலம் காக்கப்படவேண்டிய ஆசாரங்கள்.


உடல் குறித்த ஆசாரங்கள் - சில முக்கியமான உண்மைகள்!

1. நமது மனித உடலில் 9 வாயில்கள் உள்ளன - 2 கண்கள், 2 காதுகள், 2 நாசித்துவாரங்கள், 1 வாய், 2 நீர் / உணவு உண்ட பின் ஏற்படும் கழிவுகளை வெளியேற்றும் வாயில்கள். இவற்றிலிருந்து வெளியேறும் அனைத்துப்பொருள்களும் கழிவுகள் - இவை அமங்கலம்.

யாராய் இருப்பினும் உடல் கழிவுகளை வெளியேற்றியவுடன் இறைவனையோ அல்லது நம் மதிப்பிற்கு உரியவரையோ காணும் / தொடும் முன் நீரால் முறைப்படி சுத்தம் செய்து கொள்ளவேண்டும். இது தெய்வங்களின் எதிர்பார்ப்பு.

இது எல்லோருக்கும் பொது விதி! பார்ப்பனருக்கு மட்டும் அல்ல!! இந்த 9 துவாரங்கள் எல்லோருக்கும் தானே உள்ளன!

ஒரு பார்ப்பனர் தனது காதின் துளையைத் தீண்டி அழுக்கை எடுத்தால் அவர் அந்தக் கையை நீரால் அலம்பாமல் இன்னொரு சாதிக்காரரைத் தொடக்கூடாது - காதின் அழுக்கைத் தொட்டதால் அவருக்கு எச்சில் தீட்டு!!

வால்மீகி இராமாயணத்தில் ஒரு காட்சி. சீதையைப் பிரிந்த இராமன் சுக்கிரீவனிடம் வருந்திக் கண்ணீர் சிந்த, நண்பரைத் தேற்றிய சுக்கிரீவன் இராமனின் கண்ணீரை அசுபம் போக்க நீரால் துடைத்தார் என்று சுலோக வரிகள்! குறிப்பு: இவர்கள் இருவருமே பார்ப்பனர் அல்ல! இராமன் மனிதன் வாழும் வழி காட்ட வந்தக் கடவுள்!!


2. இரத்தம், சீழ் போன்றவையைத் தொட்டாலும் நீரால் சுத்தம் செய்து கொள்ளவேண்டும் - இதுவும் எல்லோருக்கும் பொது.

மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்குப் பிறப்புறுப்பின் வழியே இரத்தம் வெளியேறுவதால் (அதுவும் உடலின் ஒரு வாயிலின் வழியாகக் கழிவு வெளியேறுகிறது என்பதால்) அந்தக்காலம் முடியும் வரை தீட்டு. விலகி இருந்தால் அது தான் நாம் பெரியோருக்கும் தெய்வங்களுக்கும் செய்யும் மரியாதை. திரௌபதியும் இதைத் துச்சாதனனிடம் கூறுகின்றாள். குறிப்பு: அவள் பார்ப்பனத்தி அல்ல!

கோயிலுக்குள் சிறுநீர் கழித்தல் தவறு என்றால் மாதவிடாய்க் காலங்களில் உள்ளே நுழைவதும் தவறே!

ஆண்களுக்கும் விந்துவை வெளிப்படுத்தினால் தீட்டு - தலை முதல் குளித்து சுத்தம் செய்துகொள்ளவேண்டும்!!! அதனால் “பெண்கள் என்றால் மட்டமா?” என்று சீறிப்பாய இதில் ஒன்றுமே இல்லை. இடைவிடாமல் பொதுவாக 3 நாள்கள் இரத்தம் வெளியேறுவதால் 3 நாள்கள் தீட்டு என்றனர்.


3. பல் விளக்குவது, உறக்கம் நீங்கி எழுந்த பின் குளிப்பது, குளித்தபின் குளிக்காமல் இருப்பவரைத் தொடாமல் இருப்பது, துவைத்த ஆடையை மட்டும் உடுத்துவது, குளித்தபின் மட்டுமே உணவு அருந்துவது, முடியை நீக்கினால் தலை முதல் குளிப்பது போன்றவை யாவும் பார்ப்பனர் மட்டுமின்றி எல்லோராலும் கடைபிடிக்கப்படவேண்டிய ஆசாரங்கள்!!!

காலையில் நீராடவில்லை என்றால் பெற்றத் தாயாரும் தீண்ட மாட்டார். இன்றும் எங்கள் வீட்டினில் இதைக் காணலாம். இதில் சாதி வெறி எதுவும் இல்லை.

பார்ப்பனர்களுக்குக் கெடுபிடி அதிகம் - ஆசாரம் காக்காமல் இருந்தால் சாத்திரம் கூறும் தண்டனைகள் அதிகம் - அவர்களுக்கு வேதம் ஓதுதல், யாகங்கள் செய்தல், கோயிலில் இறைவனைத் தொட்டு கைங்கர்யம் செய்தல் போன்ற பொறுப்புகள் நியமிக்கப்பட்டு இருந்ததால்.


4. பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றிலும் உடல் குறித்த ஆசாரங்கள் உண்டு. ஒரு குழந்தை பிறந்தால் அந்தக் குடும்பத்தில் அனைவரும் 10 நாள்கள் கோயிலுக்கும் செல்லக்கூடாது வீட்டிலும் இறைவனுக்கு திருவாராதனம் செய்யக்கூடாது – இதனால் நாம் அந்தக் குழந்தையை வெறுக்கின்றோம் என்று பொருள் கொள்ளலாமா? அருமைத் தந்தையார் இறைவனடி சேர்ந்த போது அவரது மேனியைக் கட்டிக்கொண்டு கதறும் குடும்பத்தார் அவரது ஈமச்சடங்குகள் முடிந்த பின்பு தலை முதல் குளித்தால் அவரை அவமானப்படுத்துவது ஆகுமா?



முடிவுரை

சில மருத்துவமனைகளில் அல்லது அலுவலகங்களில் “காலணிகள் அணிந்து உள்ளே வரவேண்டாம்” என்று அறிவிப்புப் பலகை மாட்டி இருப்பர். மதித்து அதன்படி நடக்கின்றோம். அது போலத்தான் தெய்வங்களும் சாத்திரங்கள் என்ற “அறிவிப்புப் பலகைகளை” மாட்டி முனிவர்கள் மூலம் நமக்கு அறிவித்தனர்.

“மதிக்காமல் நடப்போர் என்ன குறைந்து விட்டனர்?” என்று கேட்பவருக்கு: நாம் செய்யும் தவறுகள் நமது நல்வினை மற்றும் தீவினைகளை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நமது ஊனக்கண்களால் காண முடியாது. மதித்து அதன்படி நடந்தால் நன்மை நமக்கே என்பது ஆன்றோர் வாக்கு. விளைவுகளைச் சந்திக்கத் தாங்கள் தயாராக இருந்தால், கேள்வியே இல்லை - உங்கள் விருப்பம். சனாதன தருமம் யாரையும் அவமானப்படுத்தவில்லை என்பது மட்டுமே நான் சொல்ல விரும்பும் உண்மை!

சிலருக்கு உடல்நலம் குன்றியிருந்தால் அல்லது வயது முதிர்ந்து தள்ளாமை இருந்தால் நிச்சயம் தரும சாத்திரம் விதிவிலக்கு அளிக்கத் தவறியது இல்லை. "குட்டிக்கரணம் போட்டாவது நிறைவேற்று!" என்று யாரும் மிரட்டவில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடைபிடிப்போம். நம் அலுவலகத்தில் ஒரு விதிமுறையை ஒரு நியாயமான காரணம் பற்றி நாம் மீறவேண்டினால் மேலதிகாரிக்கு ஒரு விண்ணப்பக் கடிதம் கொடுக்கின்றோம் அல்லவா? அது போல நியாயமான இயலாமை இருந்தால் இறைவனிடம் மனத்தால் மன்னிப்பு வேண்டுவோம் - இது அவரது ஆணைக்கு நாம் செலுத்தும் மரியாதை. அவ்வளவே.


7 comments:

  1. Well said. I would also like to add that even a cursory reading of Marco Polo's travels to Pandyan kindgom (Tamilakkam) would suffice to prove that all tamil people had their own drinking mugs. One never drank water in another's cup and they always lifted it above their lips. Sipping and drinking was introduced by colonial rulers and islamic invaders. Tamil people have unfortunately forgotten olden ways. It is funny that Polo contrasts the Tamil people who bathed twice a day against the 'dirty' chinese who never took bath sometimes for weeks :-)

    ReplyDelete
    Replies
    1. Thanks for the very informative comment, Ramia!

      Delete
  2. “ஆசாரத்தைத் தீண்டாமை என்று கதைகட்டிப் பரப்பினர் திராவிட இயக்கத்தினர்” என்று சொல்வார் “திராவிட மாயை” சுப்பு. அப்படிச் சொல்லித்தான் பிராம்மண துவேஷத்தை நான்கு தலைமுறைக்கு வளர்த்துள்ளனர். அருமையான எளிமையான கட்டுரை. பாராட்டுகள்! நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, ஐயா. 100% உண்மை! இறைவன் அருளால் இந்த கொடிய மாயையை வெல்வோம். வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய் 🌷

      Delete
  3. பக்தி இல்லாதவர்களுக்கு ஆசாரம் தவறாகவே தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை. 🙏 ஆசாரங்கள் திருமகளின் அருட்பார்வையைப் பெற்றுத் தரும் என்பதும் ஆசாரங்களைத் தவிர்த்தல் மாமுகடியை அழைத்துவரும் என்பதும் பலரும் அறிவதில்லை.

      Delete
  4. Well said. The way of life which was followed for hundreds of years , is relevant even now. Especially in times of covid. Athma sudhhi ( sookshma/ internal cleaning as we are bound by 3 gunas) and sthoola sudhhi ( karmendriyam/ impurities from our body).. both are prescribed for everyone's well-being. It is all the more important for priests who have the responsibility of taking care of Archa Roopa God.

    ReplyDelete